December 29, 2010

முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது....2

லவ் லெட்டர் ரெடி.....கொடுக்க ஒரு "கேனபயலும்" கிடைச்சாச்சு...அடுத்து என் டயலாக் இதுதான்.."ஹலோ..நான் பிரசன்னவோட ஃபிரண்டுங்க...நீங்க தப்பா நினைக்காம இந்த லெட்டரை வாங்கிக்குங்க...படிச்சு பாருங்க..பிடிக்கலேனா கிழிச்சு போட்ருங்க..!!" இதுதான் நான் பேச வேண்டியது
.
உணவு இடைவேளையில் ஒருவன் "சுஜினி" போல கற்பனையாக நடிக்க... நான் கடிதம் கொடுப்பதுபோல் ஒத்திகை நடந்தது..நான் கையில் கடிதத்துடன் சென்று "ஹலோ...நான் பிரசன்னா ஃபிரண்டு சதிஷ்ங்க...நீங்க......," 
பிரசன்னா இடைமறித்து "டேய்...இப்போ உன் பேரை யாரு சொல்ல சொன்னா...இது ரொம்ப அவசியம்...?" 
எல்லாரும் சிரிக்க மீண்டும் ஒத்திகை..."ஹலோ நான் பிரசன்னா ஃபிரண்டுங்க..நீங்க தப்பா நினைக்காம இந்த லெட்டரை.."
சொல்லி முடிப்பதற்குள் பொருளாதார ஆசிரியை வந்துவிட..
நான் குழற..."வாங்கிக்குங்க...பிடிக்கலேனா கிளாஸ் விட்டு வெளிய போயிடறேன்..என்று முடிக்க மீண்டும் வகுப்பே சிரித்தது..!!

மாலை...
எங்கள் பள்ளி முடிந்து செல்லும் வழியில் தான் அவள் படிக்கும் பள்ளி உள்ளது. என் வகுப்பு மொத்தத்திற்கும் பிரசன்னா "கிரீம் பன் மற்றும் பெப்சி" வாங்கி தந்தான் அவன் செலவில். எனக்கு மட்டும்  2 கிரீம் பன்..(நான் தானே பலிகடா..). இதற்கு இடையில் பெப்சி குடித்தபடி நான்"ஏண்டா இன்னைக்கு ஒத்திகையே அபச குணமா நடக்காம போச்சே...அதனால இந்த காரியத்தை நாளைக்கு செஞ்சா என்ன..? 
பிரசன்னா "நாளைக்கும் உனக்கு கிரீம் பன் வேணும்னா கேளு வாங்கி தரேன்.ஆனா நீ இன்னைக்கு கண்டிப்பா கொடுக்கணும்டா..!! அவன் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது...எனக்கோ எல்லாம் இருளாவது போலிருந்தது. 

நான் கடிதம் கொடுக்க வேண்டிய இடம் "ஹோப் காலேஜ்" என்ற பஸ் நிறுத்தம். அந்த இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போதுதான் கவனித்தேன்....நல்ல கூட்டம் கூடி இருந்தது. மொத்த கூட்டமும் என்னை" பொதுமாத்து" போடத்தான் கூடி இருப்பதாய் தோன்றியது. சுஜினி அவள் தோழிகளுடன் வரும்போதே நாங்கள் பஸ் நிறுத்தத்தின் எதிர்புறம் கூடி இருப்பதை கவனித்து விட்டாள்.என்னை கடிதம் கொடுக்க எல்லாரும் போக சொல்ல, நான் சாலையை கடக்க தாமதிக்க..,வெள்ளிங்கிரி பிடித்து தள்ளி விட்டான். நான் ஒரு வழியாய் சாலையை கடந்து அவள் நிற்கும் இடத்திற்கு அருகே சென்றேன்.அவள் ஏதோ தன் தோழியிடம் சொல்லி சிரித்து கொண்டாள். நான் ஒவ்வொரு பஸ் வரும்போதும் இதில் ஏறி சென்று விடுவாள்...என காத்திருக்க..அவளோ போகாமல் பேசிகொண்டே இருந்தாள்.மறுபுறம் எதிரில் இருந்து பிரசன்னா மற்றும் நண்பர்கள் கல்லெடுத்து எறியவும்,செருப்பை காட்டியும், நாக்கை மடித்து கடித்தும் என்னை மிரட்டி கொடுக்க சொன்னார்கள். எனக்கோ கூட்டம் மொத்தமும் என்னையே பார்ப்பதுபோல் ஒரு பிரம்மை. 

ஒரு "கிரீம் பன்னுக்கு ஆசைப்பட்டு பப்ளிக்ல ஜாம் ஆக போறியே..?" என்று இதயம் அடித்துகொண்டது. நேரம் போக போக பிரசன்னா சாலையை கடந்து வந்து "எழுத்தில் பதிய முடியாத ஒரு கெட்ட வார்த்தையை" என் காதோடு ஓதிவிட்டு மறுபுறம் போனான். நான் இறுதியாக போர் வீரனானேன். நெஞ்சை நிமிர்த்தி மேல் பாக்கெட்டில் இருந்து கடிதத்தை எடுத்தேன். எடுத்தபோது கடிதத்தோடு ஒரு ரூபாய் நாணயமும் ஒன்று வந்தது.இதுதான் சரியான யோசனை என்று அந்த கடிதத்தோடு ஒரு ரூபாயையும் காட்டி "ஹலோ...ரெண்டு  50 இருக்குங்களா..?என்று கேட்க அவளோ "இல்லை" என தலை ஆட்ட...நான் முகத்தை சோகமாக்கி தொங்கவிட்டபடி சாலையை கடந்து நண்பர்களிடம் "டேய் மாப்ள..அவளுக்கு பிடிக்கலேன்னு சொல்லிட்டா டா..?!என்று வானம் பார்த்து பேசினேன். 

பிரசன்னா முகம் இருண்டு போனது. இதற்கு இடையே வெள்ளிங்கிரி "ஏண்டா நான் பார்த்துகிட்டே தான் இருந்தேன் நீயும் ஜாஸ்தி பேசல அவளும் ஒன்னும் பேசல அப்புறம் எப்படி..?குழப்பமா இருக்கே..என்று இழுத்தான். நான் சுதாரித்து "நான் பேசுனது உனக்கு தெரியல பஸ் மறைச்சிடுச்சு..ஆனா அவ முடியாதுன்னு தலை ஆட்டுனதை பார்த்த தானே..?! என்று சமாளித்தேன்.நண்பர்கள் துவண்டு போன பிரசன்னாவை தேற்ற தொடங்க நான் நீண்ட பெருமூச்சு விட்டேன்.
இவ்வளவுதானா என்று நினைக்காதீர்கள்...கதைக்கு கிளைமாக்ஸ் ஒரு வாரம் கழித்து தான் நடந்தது.

சுருக்கமா சொல்றதுனா..மீண்டும் அவள் அதே பஸ்ஸில் பிரசன்னாவை பார்த்து சிரிக்க,இவன் அவள் தோழியிடம் சொல்லி கடுப்பாக, சுஜிநியோ நான் "ஒரு ரூபாய்க்கு சில்லறை" கேட்டதை உடைக்க, அவனுக்கோ காத்து வழியே புகை மண்டலமே போக, வகுப்பு நண்பர்களிடம் அதிகாலையில் வந்து இதை பரப்ப, நான் வழக்கம்போல "குட் மார்னிங் " சொல்லி என் இருக்கை செல்ல, மேஜை விரிப்பை காணமல் நான் யோசிப்பதற்குள் என் தலையை ஒரு துணி மூட கண் இருளடைந்தது....சரமாரியாக பல திசைகளிலும் அடி விழ கண்ணில் நட்சத்திரம் சுற்றியது. பிறகு என்ன ஒரே நக்கலும்,கேலியும் அடியும் தான். அதிலிருந்து "வாடா 1 ருபீ காய்ன்"என பட்டை பெயர் வைத்து என்னை அழைக்க துவங்கினார்கள்.

பிரசன்னாவும் சுஜினியும் என் காமெடி உபயத்தில் பேச தொடங்கி,ஒரு மாதத்தில் அவர்கள் காதல் கனிந்தது.  

December 26, 2010

முதல் முதலா லவ் லெட்டர் கொடுத்தது...



வாழ்க்கை என்னும் "ரோடு ரோலர்" எல்லாவற்றையும் நசுக்கிய போதும்...சில அழகான தருணங்கள், சில நகைச்சுவை சம்பவங்கள் , பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள், நம்மை கடந்த தேவதைகள், (பில்ட் அப்) அட்டுகளையும் தேவதைகளாக வர்ணித்த கவிதைகள்..,நண்பர்கள் காதலுக்காக "லோல்" பட்டது...இப்படி மறக்க முடியாத சிறு சந்தோசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

"வாத்தியார் தவறான பதிலுக்கு மறந்து முழு மதிப்பெண் போட்ட போது கிடைத்த சந்தோசம்" போல் இந்த சந்தோஷ நினைவுகளும் நம் இதய துடிப்பை அதிகரிக்கத்தான் செய்கின்றன...நிற்க
.
நான் +2 படிக்கும்போது என் நண்பனின் காதலுக்காக செய்த "அலப்பரை தான்" இந்த பதிவு. நான் கவிதை என்று கிறுக்க தொடங்கி 3 வருடங்கள் ஆன தருணம் அது. அப்போது "பிரசன்னா" என்ற என் நண்பன் தினமும் வரும் பேருந்தில் "சுஜினி" என்ற பெண்ணை கண் பார்த்து காதல் வளர்த்து வந்தான்.எத்தனை நாள்தான் இப்படியே கண்ணை மட்டும் பார்க்கிறது..? அதனால ஒரு லவ் லெட்டர் கொடுத்து காதலை வெளிப்படுத்த நினைத்தான். 

வகுப்புக்கு வந்ததும் சக நண்பர்களிடம் ஆலோசனை கேட்க்க நான் முந்திரிகொட்டை போல "மாப்ள நீ லவ் லெட்டர் கவிதையா எழுதி கொடு..அப்பத்தான் இம்ப்ரெஸ் ஆவாள்..என்று ஐடியா கொடுத்தேன். 
அவன் கவிதை எழுத வராது என்றதும்..நானே அவளை பற்றிய சில குறிப்புகளை கேட்டு அதை வைத்து ஒரு கடிதமும் எழுதியும் கொடுத்தேன்...கடிதம் இதுதான்..

"என் செல்ல பட்டாம்பூச்சிக்கு...
ஆம்..
என் நண்பர்களிடம் உன் பெயரை 
அப்படித்தான் செல்லமாக சொல்லி வைத்திருக்கிறேன்..
ஏன் தெரியுமா?
உன் கண்கள் என்னை பார்த்ததும்.., 
"பட்டாம்பூச்சியின் சிறகை"போல் அடித்துகொள்ளுமே 
அதனால்..!!
நீ நலமா...? நான் இங்கே சுகமாய் இல்லை...
தினமும் இரக்கமே இல்லாமல் 
என் ஆசிரியர் கொடுக்கும் எழுத்து சுமைகளை விட... 
சொல்லாமல் வைத்திருக்கும் "உன்மேலான என் பிரியம்" 
வளர்ந்து வளர்ந்து பெரும் சுமையாக சேர்ந்து 
என்னை அமுக்குகிறது...!! 
உன் தோழி "பசி" என்றதும்.. 
உன் மொத்த மதிய உணவையும் கொடுக்கும் 
இரக்க குணம் உனக்கு என கேள்விப்பட்டுதான் 
இந்த கடிதத்தை எழுத தைரியம் வந்தது எனக்கு..
தோழிக்கு இத்தனை செய்த நீ 
உன் தோள் சாயும் சின்ன சந்தோசத்தை மட்டும் தருவாயா எனக்கு..? 
-உன்னை பற்றிய கனவுகள் மட்டும் காணும்  
ஒரு இதயம் (13A BUS)"

கடிதம் ரெடி...யார் கொடுப்பது..? பிரசன்னவுக்கோ அவளை பார்த்தாலே "பிரசவம்" கண்டு விடுகிறதாம். அப்போதுதான் வெள்ளிங்கிரி என்னை கை காட்டி "டேய் சதீஷ் கொடுத்திடுவான்..அவன்தான் காமெடியா பேசி கொடுக்க சரியான ஆள்..?!" என்று என்னை மாட்டிவிட்டான். அவனுக்கு என்னை இப்படி மாட்டி விடுவதில் ஒரு குரூர ஆசை. நான் முடியவே முடியாது என்று "கசாயம் குடித்தும்" பலனில்லாமல் போனது...இதுக்கு பேருதான் "எங்கோ போறத எடுத்து...எதுகுள்ளோ விடுவது" என்று சொல்வார்கள். 

எல்லா நண்பர்களும் ஒன்று சேர்ந்து நண்பேண்டா என்றதும்...வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டேன்...
இனிதான் சனியே....ஆரம்பம்...

தொடரும்....    

December 23, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

"நிலாச்சோறு"  ஊட்டுவார்கள் 
குழந்தைக்கு..
"நிலாவே....சோறு ஊட்டும் 
எனக்கு...

ஆதலினால் காதல் செய்வீர்..!!
******************************************
நிலா தன் சிநேகிதனுக்கு 
இரவு பாவடையில் வைத்து  
"காக்கா கடி" கடித்த 
துண்டுகள்தான் 
நட்சத்திர சிதறலோ..??
******************************************
இந்த நிலா முதிர்கன்னியின்  
எதிர்பார்ப்பு...
வரதட்சணை வில் முறிக்கும்  
வீர இளைஞன்..!!

December 2, 2010

அவ்வளவு அழகு நீ..!!

உன் 
அழகையெல்லாம் சாறு பிழிந்து, 
வடிகட்டி எடுத்து வைத்தால் 
போதும்...
ஆயிரம் வருடங்களுக்கான 
தீங்கில்லாத "மது" தயார்..
அவ்வளவு அழகு நீ..!!  
**********************************************
போட்ட கோலத்தின் அழகை 
நீயே தலை சாய்த்து ரசித்து 
பின் குளிக்க செல்வாய் 
சுடு நீரில்...
"குனிந்து கோலம் போட்ட அழகை"
தீயாய் பார்த்திருந்த 
குருவி 
குளிக்க செல்லும் 
"சில்லென" இருக்கும் 
ஆற்று தண்ணீரில்...!!
************************************************
"இப்படியா ஒரு பொட்டபுள்ள"என்ற 
உன் அம்மாவின் வசவை கேட்டு 
சிணுங்கியபடி 
புரண்டு படுப்பாய் மீண்டும்..
பேரழகை ஜன்னல் வழியே கண்டு 
மருகிய குருவி கத்தும்....
இதைகேட்டு 
"மார்கழி மாதம்" வந்து விட்டதென 
மற்ற குருவிகளும் கிரிச்சிட 
விடியும் 
என் காலை பொழுது..
குட் மார்னிங்...!?

November 28, 2010

நீ "மறந்துவிடு" என்றதும்..

வலிக்கமலே அடிப்பதில் 
என் அம்மா போல 
யாருமில்லை....!!

அடிக்காமலேயே வலிக்க 
செய்வதில் 
உன்னை போல 
யாருமில்லை...!!
***************************************************
நீ 
"மறந்துவிடு" என்றதும்..
என் வீட்டிற்க்கான வழியே 
எனக்கு 
மறந்து போனது 
என் பெயரோடு சேர்த்து..!!

November 27, 2010

2 "எஸ்.எம்.எஸ்"

உன் உணவு....
காலை... 
3 தோசைகள்...
மதியம்... 
1 தயிர் சாதம்...
இரவு... 
2 ஆப்பிள்கள்....

எனக்கு 
உணவோ.....
நாள் முழுமைக்கும் 
நீ அனுப்பும் 
2 "எஸ்.எம்.எஸ்"
மட்டுமே...!?

நான் ஏன் மெலிந்திருக்கிறேன்..?
என 
உனக்கு 
இப்போதாவது புரிகிறதா?

November 25, 2010

நீ என் உயிரிலேறி விட்டாய்

உன்னை பிரிந்து 
ரயிலேறும் போதுதான் 
எனக்கு புரிந்தது...
நீ என் 
உயிரிலேறி விட்டாய் என்று..!!
என் 
இதய சுவற்றிலெல்லாம் 
உன் பெயரைத்தான் 
கிறுக்கி வைத்திருக்கின்றன 
உன் 
ஞாபக விக்கல்கள்..!!
****************************************************
அனுப்பிய அடுத்த நொடி 
உன்னிடம் வந்து சேரும் 
இந்த 
"எஸ்.எம்.எஸ்" போல...
என்னையும் 
அனுப்ப முடிந்தால் 
சுகபடுவேன் ஜீவனெல்லாம்..!!
******************************************************
வழக்கமாய் 
குடிக்கும் நேரத்தில் குடிக்கா விட்டால்
கை நடுங்கும் 
குடிகாரன்போல...
வழக்கமாய் 
நீ அழைக்கும் நேரத்தில் 
உன் அழைப்பு வரா விட்டால்
நடுங்கும் என் உயிரெல்லாம் 
பெரும் குடிகாரன்போல..!!
******************************************************
நான் 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரின் 
உச்சரிப்பே... 
என் மருந்தாகும்...!!

நீ 
நோய் பட்ட காலங்களில்...
உன் பெயரில் 
அர்ச்சனையே.... 
என் கோவில்களில்...!!

November 17, 2010

கொஞ்சூண்டு கொடு...

ஓயாமல் 
உன்னை பற்றி 
பேசிகொண்டே இருக்கும் 
என் வாயாடி மனம்...

ஓயாமல் 
நீ சரி செய்தும் 
எட்டி பார்க்கும் 
உன் "பேரழகுகள்" மட்டுமே 
என் வாயடைக்கும்..!!
**********************************
கஞ்சத்தனத்துக்கு இன்னொரு பெயர் 
நீ..
கைபேசியில் பேசும் 
ஓரிரு நிமிடங்களை போலத்தான்...
கனவிலும் வந்துவிட்டு 
ஓடி போகிறாய்..!! 
*************************************
கடவுள் எத்தனை கருணையானவர்...?
உனக்கு இத்தனை 
அழகுகளை 
அள்ளி தந்திருக்கிறார்..!!

நீயும்கூட 
ஓர் தேவதைதானே தானே..?
எனக்கு 
காதலை அள்ளி தராவிட்டாலும்...
கொஞ்சூண்டு கொடுக்கலாமே 
நீ..!! 
*************************************
என் கவிதைகளை படிக்கும் 
நண்பர்கள்,
உன்னை பற்றி விசாரிக்கிறார்கள்...
உன் சம்மதத்திற்காக காத்திருக்கும் 
என்னைபோல 
அவர்களையும் காத்திருக்க 
சொல்லி விட்டேன்..!!

காதலின் இன்னொரு முகம்.....

உன் 
காதலின் 
இன்னொரு முகம் 
சின்ன சின்ன முகப்பருக்களாக 
வெளிப்படும்...!!

என் 
காதலின் 
இன்னொரு முகம் 
சின்ன சின்ன சில்மிஷங்களாக  
 வெளிப்படும்..!!

September 30, 2010

காதலும் குறுஞ்செய்தியும்-5



பாடல் கேட்கும் வசதி,
இணைய வசதி,
படம் பிடிக்கும் வசதி...என 
எல்லாம் 
என் கைபேசியில் இருந்தும்...,
உனக்கு "குறுஞ்செய்தி" 
அனுப்பும் வசதிதான் 
நான் 
அதிகம் விரும்பி பயன்படுத்துவது..!! 
********************************************
கைபேசி கையில் இருந்தால்...?
உனக்காக ஒரு 
"கவிதை" குறுஞ்செய்தியாக உருவாகி 
கொண்டிருக்கும்..!!
இல்லையென்றால்..., 
"இதயம்" 
உன் நினைவை அசை போடும் 
துடிக்க மறந்து..!!
*****************************************
பேலன்ஸ் இல்லை.., 
அப்பா இருந்தார்..,
படித்துகொண்டு இருந்தேன்.., 
நெட்வர்க் இல்லை..
என 
எனக்கு பதிலாய் 
பல மறுமொழிகள் வைத்திருப்பாய்...
ஆனால் 
 நான் தொடர்ந்து 
உனக்கு "குறுஞ்செய்தி" 
அனுப்புவதற்க்கான ஒரே காரணம்..
நீயென் பிரிய தோழி...!!
***************************************************
உனக்கு அனுப்பிய கவிதைகள் படித்த 
உன் தோழிகள் 
என்னை பார்க்க விருமபுவதாய் 
சொல்லும் 
உனக்கேன் புரிவதில்லை..?
நான் உனக்கு அனுப்பியது 
"கவிதைகள்" அல்ல 
"காதல்" என்று..!! 

September 26, 2010

காதலை.., ஒட்டுமொத்தமாய்....

காதலை..,
ஒட்டுமொத்தமாய் 
ஒரு முத்தத்தில் காட்ட சொன்னால்
முடியாத என் நீண்ட முத்தம்
ஒருவேளை
உன்னை மூச்சு முட்ட செய்தாலும்
ஆச்சரியமில்லை...!!

காதலை...,
ஒட்டுமொத்தமாய்
ஒரு கட்டிபிடித்தலில் காட்ட சொன்னால்..
என் இறுக்கத்தில்
ஒருவேளை நீ
செத்து போனாலும் ஆச்சரியமில்லை..!!

ஆனால் காதலை ஒட்டுமொத்தமாய்
இப்படி
மறக்க சொல்லி கேட்கிறாயே..?
இறக்க சொல்லி இருந்தாலும்
புண்ணியமாய்
போயிருக்கும் உனக்கு...!?

September 14, 2010

ஒ..தலையணையே..!

நீ அவள் போல் இலகு இல்லை...
தள்ளி படு..
தலையணையே..!!
******************************
நீ 
அணைத்த  தலையணைதான் 
மந்திரித்தது என்னை..
ஒ.. 
இதற்கு பெயர்தான்  
தலையணை மந்திரமா?
*******************************
காதல் காலங்களில்..
நொந்து சாவேன் 
தலையணை கண்டு
நான் ..!!

கல்யாண கோலத்திற்கு பிறகு ..
வெந்து சாகும் 
தலையணை...
நம்மை கண்டு..!!
******************************

September 13, 2010

காதலும் குறுஞ்செய்தியும் -3

குறும்பி நீ 
குறுஞ்செய்தி அனுப்புகிறாயா...?
இல்லை...
குறும்பு கனவுகளை அனுப்புகிறாயா...?!
சிலிர்க்கிறது... 
ஒவ்வொரு இரவும்...!!
***********************************************
ரயில் கண்டால்..., 
கையசைக்கும் எல்லா குழந்தைகளும் ...!!
மயிலே  
உன் "எஸ்.எம்.எஸ்" கண்டால் 
என் எல்லா அணுக்களுக்குள்ளும் 
ஒரு குட்டி ரயிலே ஓடும்..!!
*************************************************
"எஸ்.எம்.எஸ்" அனுப்பி 
எழுத்து தேய்ந்த கைபேசிதான் 
நம் 
குழந்தைக்கு விளையாட்டு பொருள் 
இப்பொழுதெல்லாம்...!!

September 8, 2010

காதலும் குறுஞ்செய்தியும்....2

நீ தினமும் 
ஒரு "எஸ்.எம்.எஸ்" 
மட்டுமே அனுப்பினாலும்..
நீயெனக்கு 
"பொன் முட்டையிடும் வாத்துதான்..!!"
**************************************************
கனி பேசியே...
உன் "கைபேசியை" நான் 
எடுத்து பார்ப்பது... 
உன்னை 
சந்தேகப்பட்டு அல்ல..
நாளெல்லாம் 
படுக்கையிலும்,பக்கத்திலும் 
இருப்பதால் 
மெலிகிறதா....என்று 
பரிசோதிக்கவே..?!
தூரத்தில் இருக்கும் நான் மட்டும் 
எப்படி..?
************************************************** 
மனசு போல மாற்றி விட்டாய் 
உன் "சிம் கார்டையும்"...
என்றைகேனும் வந்து சேரும்  
என் "பிரிய எஸ்.எம்.எஸ்" 
அனைத்தும்
நீ 
"சிம்"  இடும் போது.....?!




September 4, 2010

காதலும் கைபேசியும்..

எப்போதும் 
என் குறுஞ்செய்திகளின் குலதெய்வம் 
நீதானடி..
அனுப்பிய அனைத்தும் ஒன்றுகூடி 
உனக்காக "தேர்" இழுத்தாலும் 
ஆச்சர்யமில்லை..!! 
********************************************
"இனிய இரவு" என்று தினமும் 
குறும்செய்தி அனுப்புகிறாய் அப்பாவி போல...
இனியவள் நீயில்லாத 
இரவு எப்படி 
"இனிய இரவாக" முடியும்..?
*******************************************
ரகசியம் இதுதான்...
என் கைபேசிக்கு 
எஸ்.எம்.எஸ் பூஸ்டர்....  
என் கைபேசியில் இருக்கும் 
உன் புகைப்படம் மட்டுமே 
என் பூஸ்டர்...!!
******************************************
நீ...
என் கைபேசி 
எண்ணைகூட அழித்து விட்டாய்...!!

உன் "போடா" என்ற 
ஒரு வார்த்தை "எஸ்.எம்.எஸ்"கூட 
அப்படியே இருக்கிறது 
கைபேசியை அழகாக்கி...
கண்ணில் ஈரமாக்கி...!!
*******************************************
அழகி...
நீயும் என் காதலுக்கு 
சைலன்ட் மோடு...!!
அதிரும்...
உன் கைபேசியும் 
என் குறுஞ்செய்திக்கு 
சைலன்ட் மோடு..!!
******************************************


September 2, 2010

திரும்பி பார்க்க வைக்கும் அழகு நீ..

யாரையும் திரும்பி பார்க்க வைக்கும்
அழகு நீ..
யாரையும் திரும்பி பார்க்கா
அழகு நீ....!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டம்தான்..!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டமும்
திரும்பி பார்க்கும்
இவனை..!

July 17, 2010

தோளாகவே மாறிவிடு...!!

ஒரு நாள் மட்டுமாவது
உன்
நெஞ்சுக்குரியவனாக வேண்டும்...!


அந்நாள்
முத்தத்தில் விடிந்து
முத்தத்தில் முடிந்து போக வேண்டும்...!

தனிமை துரத்தி...
தோளில் சாய்ந்து
தோளாகவே மாறிவிடு...!

பகல் மறந்து...,
பசி மறந்து...,
பழையன மறந்து...
பருவ இலை விரித்து...
போதுமெனும் வரை பரிமாறு...!

இலை துடைத்து உண்பது
இவன் கடமை..!

May 20, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷ நாள்தான்...

உண்மையை சொல்வதானால்...
உன்னை எல்லா பொழுதும் 

நினைப்பதில்லைதான்...
குறிப்பாக கவிதை எழுதும் 
நேரங்களில்...

ஆனால் எழுதும் கவிதை
உன்னை பற்றியதாய் தான்
இருக்கும்..!!
****************************************
******
என்னிடம் அப்படி என்ன விசேஷம்..? 
என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...தோழி..!!
***********************************************
பொழுது போக்க உனக்காக
நான்
பல கலைகள் கற்று வைத்திருக்கிறேன்...


பொழுதுபோக்க எனக்காக
நீ
பல "அழகு" வளர்த்து வைத்திருக்கிறாய்..!

May 19, 2010

உலக ருசியான நீர்...

எப்போதும் கண்ணாடி முன் தன்னை
அலங்காரம் செய்து கொள்ளும்
"தாவணி பெண்" போல
எப்போதும் உன்னை மட்டுமே எழுதி
அலங்காரம் செய்து கொள்கின்றன
"என் கவிதைகள்"...!!
****************************************************
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்-என்
ஒரு கவிதையை நீ படி போதும் அது
சொல்லிவிடும்
என் மொத்த காதலையும்,,,..
*****************************************************
உலக ருசியான நீரில் இரண்டாம் இடம்
சிறுவாணிக்கு தானாம்..
"என்னை கேட்டிருந்தால் நான் சொல்வேன்..!!"என
உன்னை பார்த்தேன்...,
கைகொண்டு தன் உதடு மறைத்தாள்..!!
******************************************************
உறங்கபோகும் முன்
நீ உடுத்தும் இரவு உடை...
நீ உடுத்தியதும்
உறக்கம் கலைகிறது...!!

May 7, 2010

இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..?

நீ போய் விட்டாய்....
இனி 
யாராவது வழியில் உலக அழகாய்
வந்தாலும் அசைக்க முடியாது
என் இதயத்தை...?


என் கவிதைகளை படித்து 
இவ்வளவு தூரம் உங்களை 
இம்சித்தவள் யார்..?என்று
எவளாவது கேட்பாள்...!! 

பதிலுக்கு நான்
நீயென்னை மறந்து விட சொன்னபோது
ஒரு 'வெற்று புன்னகையை'
உனக்கு பதிலாக அளித்தேனே
அதையே 

அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!

April 11, 2010

உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....

நீ தமிழ் பாடத்தின்
செய்யுள் பகுதி...
உன் அழகெல்லாம் எனக்கு
மனப்பட பகுதி..!!

**********************
முத்தம் மறுக்க...
தூரத்தில் பறக்கும் குருவி கூட
அவளுக்கு
ஒரு சாக்காக அமையும்..?!

************************
நீ பிடிக்கும் பேனாவில்
எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?

************************
ஞாயிற்று கிழமைகளுக்கு நன்றி....
உன்னை
எந்த தடங்கலுமின்றி நினைக்கலாம்..!! 

**************************
இரக்கமில்லாத
காதலிக்காக வேண்டி
காத்திருக்கும் ஆண்கள் எண்ணி
பார்த்து பொழுது போக்கத்தான்
நிலவும் நட்சத்திரமும் கடவுளால்
படைக்கப்பட்டன..?!

March 16, 2010

காதல் மை.....



யாராவது 
என் வயதை கேட்டால்....
உன்னை சந்தித்த நாளில் இருந்து 
வயதை சொல்லுவேன்...
ஏனென்றால் அன்றிலிருந்துதான் 
என் வாழ்க்கை திருவிழாவாக மாறியது..!!
*********************************
நீ பிடிக்கும் பேனாவில் 
எப்போதும் மை வழிவதாக புலம்புகிறாய்..
உன்னை பார்க்கும் எல்லாருமே வழியும்போது....
உன் பேனா மட்டும் என்ன விதிவிலக்கா..?
*********************************
சிரித்துகொண்டே முடியாது என்று சொல்லவும்....
அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு 
ஆகாயம் வரை  புளுகவும்....
'காதல்' உள்ளுக்குள் இருந்தும் 
'கத்திரிக்காய்' விலை உயர்ந்துவிட்டதாய் 
கதை பேசவும்  
உன்னால் மட்டும்தான் முடியுமடி...!!
***********************************
நீ எடுத்துகொண்டு திருப்பி தராமல் 
வைத்துகொண்ட என் இதயத்தை போல...
நானும் ஒருவேளை எடுத்துகொண்டால் 
திருப்பி தரமாட்டேன் 
உன் இதழை...!!
**********************************
ஞாயிற்று கிழமைகளுக்கு நன்றி....
உன்னை 
எந்த தடங்கலுமின்றி நினைக்கலாம்..!! 

February 19, 2010

கைகுலுக்கும் தோழி...


காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி...?!
**********************************
தோழி...
தங்கைக்கும்...
காதலிக்கும்...
இடைப்பட்டவள்...!!
தோழி...
நெருக்கத்துக்கும்..
தூரத்துக்கும்..
இடைப்பட்டவள்...?!
**********************************
தோழியை கண்டதும்...
நெருக்கமாய் அமர்வாள் காதலி...!?
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி..!
**********************************
பிறந்தநாள் வாழ்த்து...
தொலைபேசியில் சொல்வாள் காதலி..!
கை குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழி..?!
**********************************
என் காதலுக்காக அவள் வாதிடுவாள்
என் சாதியோடு...?!
அவள் காதலுக்காக நான் வாதிடுவேன்
அவள் அப்பாவோடு..?!
**********************************
வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா...
சோறு கொடுத்து அனுப்புவாள்...
அப்பா..
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்...
காதலி..
முத்தம் கொடுத்து அனுப்புவாள்..
தோழிதான்...
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!

February 14, 2010

கை பேசியா..? காதல் பேசியா..?!


நீ பேசி வைத்த பின்னும்
என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார்...?
துரத்தும் உன் ஞாபக
தூறலோ..?
**********************************
கைபேசி திரையில்
உன்
எண் ஒளிர்ந்ததும்....
இளையராஜாவின்
இன்னிசை ஒலிக்கிறது
இந்த உயிருக்குள்...?!
**********************************
உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புவது
குறைந்துபோன காரணம் இதுதான்...
உனக்கு அனுப்பும்
குறுஞ்செய்திகள் அதிகரிக்க அதிகரிக்க...
என் உயிர் இளைத்துகொண்டே வருகிறது...?!
***********************************
உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு
மாற்றி பதிவு செய்து வைத்தாலும்...
கண்டு பிடித்து விடுகிறாள்
என் குறும்புக்கார தங்கை...?!
********************************
இரவில் போர்வைக்குள் இருந்து
நீ அனுப்பும்
குறுஞ்செய்திகளின் பிரிய நிறத்தை..
பகலில் படிப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது...?!
********************************
தொடர்ந்து 
அழைப்பு விட்டும்
எடுக்காத நேரங்களில்...
"பூ கட்டி கொண்டு இருப்பேன்" 
என்றாய்..?!

தொடர்ந்து 
ஒரு வார அழைப்பு விட்டும்
எடுக்காமல்...
கடைசியில் யாருடனோ
தாலி கட்டிக்கொண்டு 
வந்தது ஏன்..?